சிம்புவின் அதிரி புதிரியான கூட்டணி வெங்கட் பிரபு இயக்கம் சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என்ற செய்திதான் கோடம்பாக்கத்தை இன்று பரபரப்பாக்கி வைத்திருக்கிறது.
ஆம்… செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் நடிகர் சிம்பு. படத்துக்கு தலைப்பு ‘மாநாடு’. அரசியல் நெடி தூக்கலாகத் தெரிகிறதல்லவா… அதை உறுதிப்படுத்தும் வகையில், ‘எ வெங்கட் பிரபு பாலிடிக்ஸ்’ என டேக் லைன் போட்டிருக்கிறார் இயக்குநர்.
ஆக, சிம்புவும் சினிமாவில் அரசியல் பேசப் போகிறார். ஒருவகையில் அதற்கு தகுதியானவர்தான் அவரும். இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான். முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கியவர். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை.
தனது பழைய பாணி, பழக்க வழக்கங்களைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி பற்றி கேட்கவே வேண்டாம். எங்கு பிரச்சினை என்றாலும் முதல் ஆளாகத் தன் குரலைப் பதிவு செய்யத் தவறாதவர். சினிமாவில் உள்ள அரசியலில் கரை கண்டவர். தனது முதல் படத்தையே அரசியல் படமாகத்தான் எடுத்தார் சுரேஷ் காமாட்சி. இப்போது இன்னுமொரு அதிரடி அரசியல் படம் எடுக்கிறார்.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும்… களத்திலும் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு விரைவில் தொடங்க இருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
– வணக்கம் இந்தியா